கோவை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நில அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம் புகலூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரத்தை விளைநிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கோவை ,திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில் காவல் துறை பாதுகாப்புடன் பவர் கீரிட் அதிகாரிகள் நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கலந்து கொண்டார். முன்னறிவிப்பு இன்றி நில அளவீடு செய்வதை கண்டித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பவர் கீரிட் அதிகாரிகள் முன்னறிவிப்பு வழங்காமல் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நில அளவீடு செய்து வருவதாகவும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். விவசாயிகளை பொருத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும் உயர்மின் கோபுரங்கள் அமைக்க படுவதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.