இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய புகாரில் வழக்கு பதியாமல் காவல்துறையினரின் கட்ட பஞ்சாயத்து முயற்சியில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரியபட்டினத்தை சேர்ந்த ஒருவரின் ஏழு வயது பேத்தி, பெரியபட்டினம் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். மதர்ஷா பள்ளியில் இருந்து சில நாட்களாக தாமதமாக வருவதை கண்ட அவரது பாட்டி, தாமதம் குறித்து பேத்தியிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது அந்த சிறுமி, சேனா அப்பா என்னை அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்று, பழம் தருவதாகக்கூறி கன்னத்தில் முத்தமிடுவார்; கண்ட இடங்களில் தொடுகிறார் என்று கூற, பாட்டி அதிர்ந்து போனார். உடனடியாக கீழக்கரை மகளிர் காவல்நிலையத்தில், சேனா மீது புகார் அளிக்க சென்றுள்ளார். நேற்று காலை 10 மணிக்கு சென்றவரிடம் புகார் வாங்காமல், அங்குள்ள போலீசார் இரவு 8 மணிவரை காக்க வைத்துள்ளனர்.
இது பற்றி, அவரது உறவினர்கள் கூறுகையில், இந்த சேனா என்பவர் இதேபோல் இப்பகுதியை சேர்ந்த பலசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். தற்போது சிறுமிக்கு நேர்ந்தது பற்றி காவல்துறையினரிடம் புகார் அளிக்க சென்ற பாட்டியையும் அலைக்கழித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் யமுனாவும், சார்பு ஆய்வாளர் வேலம்மாளும் புகாரை வாங்காமல் காலையில் இருந்து வயதானவரை காக்க வைத்துள்ளனர். புகார் அளித்தால், நீயும்,சி றுமியை அழைத்து கொண்டு இரண்டு வருடம் கோர்ட்,கேஸ் என்று அலைய வேண்டும். சம்பந்தபட்ட நபரிடம் இருந்து பணம் ஏதாவதும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
அதற்கு அவரது பாட்டி, பணம் ஏதும் எங்களுக்கு தேவையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். காலையிலிருந்து 5 முறை புகார் மனுவை மாற்றி எழுத சொல்லி மகளிர் காவல்துறையினர் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, அவர் நொந்துபோயுள்ளார்.
இது குறித்து கீழக்கரை எஸ்.ஐ. வேலம்மாளிடம் குற்றம் குற்றமே இதழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இச்சம்பவம் கடந்த 2-5-2019 நடந்தது. ஆனால் நேற்று 6-5-2019 அன்று புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடி வருகிறோம் என்றார்.
பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய மகளிர் போலீசாரே, குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுவது, அப்பகுதியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனியாவது இதுபோன்ற கயவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்; மற்றா குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.