மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று நினைத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்திக்க, திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இது, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
வழக்கமாக, ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், காங்கிரஸ் – பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்கலாம் என்று, அப்போது யாருக்கு பிரதமர் பதவி மீது நாட்டம் உள்ளதோ, அவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியில், அரசின் தலைமை பதவியை விடிக்க போட்டாபோட்டியிட்டு, கடைசியில் மூன்றாவது அணி என்பது, தேர்தலுக்கு முன்பாகவே கரைந்துவிடும்.
இந்த முறை, மூன்றாவது அணிக்கான முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பவர், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ். கடந்தமுறை போல் இம்முறை பாஜக அவ்வளவு எளிதில் வெற்றி பெறாது; காங்கிரஸ் வெற்றியும் பெரும்பான்மையை தொடும் அளவுக்கு இருக்காது என்ற கணிப்புகள், அவரது மனதில் மூன்றாவது அணிக்கான எண்ணத்தை விதைத்தது.
இதற்காகத்தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை வந்து சந்தித்தார். அப்போது பட்டும் படாமல் பதில் கூறி அனுப்பிவைத்த ஸ்டாலின், அடுத்த சில வாரங்களிலேயே ராகுல் தான் பிரதமர் என்று அதிர வைத்து, சந்திரசேகர ராவின் திட்டத்தை நொறுக்கினார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும்; முயன்றால் மூன்றாவது அணி சாத்தியம் என்ற நப்பாசையுடன் மீண்டும் சந்திரசேகரராவ், அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதற்காக, தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சூட்டோடு, கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனும் தொலைபேசியில் பேசினார்.
அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டார். இதற்காக, மே 13ஆம் தேதி என்று நாளும் குறிக்கப்பட்டது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க இருந்தது. ஆனால், மூன்றாவது அணி தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் ஸ்டாலிடனிடம் பேசி, ராகுலை பிரதமர் என்று கைகாட்டிய நீங்கள் மூன்றாவது அணிக்காக பேச வருபவரை சந்திக்கலாமா என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. தேவையில்லாமல் காங்கிரஸின் பொல்லாப்பை சம்பாதித்துக் கொண்டால், தமிழகத்தில் அரசியல் காய்களை நகர்த்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்று ஸ்டாலினுக்கு மூத்த திமுக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, சந்திரசேகர ராவுடனான சந்திப்புக்கு, ஸ்டாலின் தரப்பில் இருந்து சிவப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. ஆனால், சந்திரசேகரராவின் மகள் கவிதா, தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க தனது தந்தை திட்டமிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, ஒரே போடாய் போட்டார். எனினும், மம்தா பானர்ஜி, முலாயம் சிங், மாயாவதி, குமாரசாமி, கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி கட்சிகள் துணையுடன் மூன்றாவது அணி அமைத்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டு வருகிறார்.
ஆனால், இவர்கள் எல்லாமே பிரதமர் நாற்காலியில் அமர விரும்புவர்கள் என்பதால், வழக்கம் போல் மூன்றாவது அணி, தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் காணாமல் போய்விடும் என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.