திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
கூகுள், மைக்ரோசாஃப்ட் தொடங்கி ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் BNY மெலான் நிறுவனம் வரை தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இதற்கிடையே, தனது அமெரிக்க பயணத்தின் 18ம் நாளான இன்று காலை தமிழகத்துக்கு மிக நல்ல செய்தியை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருக்கும் செய்தியை அவர் வெளியிட்டார்.
ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது. திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல், Rockwell Automation என்கிற நிறுவனம் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.காஞ்சிபுரத்தில் Rockwell நிறுவனம் அமைவதால் 365 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




