மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 130 கி. மீ. தூரம் சைக்கிளிலே கடந்து சென்ற அவலம்!
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால் முதியவர் ஒருவர் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்றார். 65 வயது முதியவரான அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை மனைவி மஞ்சுளாவுடன் இரவு முழுவதும் சைக்கிளில் கடந்து அதிகாலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைந்தார்.

கொரொனா பாதிப்பால் அவசர சிகிச்சைகளை தவிர பிற சிகிச்சை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அறிவழகன் சைக்கிளிலேயே வந்ததை அறிந்த மருத்துவர்கள் மஞ்சுளாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை கொடுத்தனர். மேலும் தங்கள் செலவில் உணவு, மருந்துகளை கொடுத்து இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பின்பு ஆம்புலன்சில் இலவசமாகவே கும்பகோணத்திற்கு அனுப்பினர்.







