சென்னையில் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாற காரணம் என்ன?
தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரொனா வைரசின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் தான் அதிகம் மையம் கொண்டுள்ளது எப்படி என அனைவரது மனதிலும் கேள்வி எழுகின்றது. சென்னையை தனது சொந்த ஊராகக் கொண்டவர்கள் வெகு சிலரே, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்களே அதிகம் என்பதற்கு தீபாவளி, பொங்கலுக்கு ஊரடங்கு காலத்தைவிட வெறிச்சோடி காணப்படும் சாலைகளில் சாட்சி ஆகும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலைநகர் அல்லவா சென்னை. அப்படி அத்தனை மாவட்டங்களும் தொடர்பு கொண்ட சென்னை இன்று கொரொனா தலைநகராக மாறி வருகிறது. அதற்கு காரணங்களாக கூறப்படும் பலவற்றில் ஒன்று மக்கள் தொகை நெருக்கம்.
சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் வாழும் மக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 26 ஆயிரத்து 553 பேர். அதுவே மதுரையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 819 பேர் வாழ்கின்றனர். கோவையில் 731 பேரும், திருச்சியில் 602 பேரும் நெல்லையில் 460 பேர் வாழ்கின்றனர். இவ்வளவு மக்களுக்குமான வசதிகள் கட்டுப்பாடுகள் சிகிச்சைகளை நடைமுறைப்படுத்தும் முன் பல பணியாளர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். அதில் தொற்று ஏற்பட்டவர்கள் அதிகம்.
சென்னையில் மட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் 14 காவல்துறையினர், 3 தூய்மைப் பணியாளர்கள், 32 ஊடகப் பணியாளர்கள் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
மக்களோடு அதிக புழக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி நடத்துபவர்கள், கோயம்பேடு காய்கறி விற்பனையாளர்கள், உணவு வினியோகம் செய்யும் ஸிவிக்கி பணியாளர்களும் ஒரு விதிவிலக்கு அல்ல. சென்னையின் பரிசோதனை வசதியும் தேசிய மாநில சராசரியை விட பன்மடங்கு அதிகம் என்பதும் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்பு வெளியாவதற்கு காரணமாக கூறுகிறார்கள் மருத்துவர்கள். உடலால் தனித்திருந்து உள்ளத்தால் இணைந்து மீண்டு எழுவோம் விரைவில்…







