தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அக்கட்சி தலைமை முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக பிரித்து தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தவெகவின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்தகட்டமாக, பூத் கமிட்டி மாநாட்டை அடுத்த மாதம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





