ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..! வேதாந்தா நிறுவனம் முடிவு!!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். போராட்டத்தை ஒடுக்க நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை உயர் நீதிமன்ற த்தில் தெரிவித்த வேதாந்த தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து கோரிக்கை நிராகரித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.







