டெல்லியில் ஒரு பக்கம் கலவரம், வன்முறையால் பீதி..! மற்றொரு பக்கம் டிரம்ப்புக்கு தடபுடல் விருந்து!!
டெல்லியின் ஒரு பகுதியில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்து பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தடபுடல் விருந்து உபச்சாரம் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்துள்ள நேரத்தில் தலைநகர் டெல்லியில், கடந்த 2 நாட்களாக வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. கல்வீச்சு, தீ வைப்பு என பல இடங்களில் கலவரம் வெடித்து, நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். போலீசின் துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர் புகைக்கு எல்லாம் கட்டுப்படாமல் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதல் நடத்துவதால் டெல்லியில் நிலைமை மோசமாகி வருகிறது.

அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மத்திய அரசுத் தரப்பிலும், டெல்லி மாநில அரசுத் தரப்பிலும் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை. சிஏஏக்கு எதிராக போராடுபவர்கள் மீது ஒரு கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதே வன்முறை பெரிய அளவில் வெடிக்க காரணம் எனவும் கூறப்படுகிறது.
இப்படி கடந்த 3 நாட்களாக கலவர பூமியாக டெல்லி மாறியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றிரவு நாடு திரும்ப உள்ளார். அதற்கு முன்னதாக டிரம்ப்பை உபசரிக்கும் விதமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் தடபுடல் விருந்து நடைபெறுகிறது.டெல்லியில் நடைபெறும் போராட்டம் குறித்து டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நானும் கேள்விப்பட்டேன் என்ற டிரம்ப் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.



