தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு..! கடந்த15 நாட்களில் இன்று தான் குறைவு!!
தமிழக்த்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் தினமும் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் 15 நாட்களில் இன்று தான் குறைந்த அளவில் தெ கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வரைக்கும் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் மார்ச் 31-ந் தேதி இந்த எண்ணிக்கை வேகமெடுக்கத் தொடங்கியது. தினமும் 50 முதல் 100 என்ற எண்ணிக்கையில் வேகமாக உயர்ந்து வந்தது. நேற்றும் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்திருந்தது. உயிரிழப்பும் 11 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கொரோனா நிலவரம் தொடர்பாக பேட்டியளித்த பீலா ராஜேஷ் மேலும் கூறுகையில், தமிழகத்தில் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 68,519 என்றும், அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளதாகவும் வீட்டுக்கண்காணிப்பில் 28,711 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் இதுவரை 19,255 பேரிடம் கொரோணா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களில் இன்று தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







