சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது..!
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வந்த நபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தாயின் அனுமதியுடன் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் என்பவரின் பெட்டிக்கடையில் திடீரென சோதனை நடத்திய காவல்துறையினர் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்குகிறார் என்பதை அறிய அவர் செல்போனை ஆய்வுக்கு கொடுக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தர மறுக்கவே சந்தேகமடைந்த அதிகாரிகள் செல்போனை வாங்கி சோதனையிட்டனர். அதில் வெவ்வேறு வயதுடைய ஐந்து சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வீடியோ இருந்ததைக் கண்டு அதிர்ந்து போய் விட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெருமாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும் இதனால் தாயின் அனுமதியுடன் மகளையும் அவரின் வீட்டிற்கு வரும் சிறுமிகளையும் பாலியல் கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பெருமாள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரு பெண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






