ரூ.50 கொடுத்தால் தங்க மூக்குத்தி எனக் கூறி ஒரு லட்சம் பேரை ஏமாற்றிய மையம்..!
ஐம்பது ரூபாய்க்கு தங்க மூக்குத்தி தருவதாக கூறி ஒரு லட்சத்துக்கு அதிகமானவரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சேவா மையம், ரூ.50 செலுத்தினால் தங்க முக்குத்தி, ரூ.1600 ரூபாய்க்கு நான்கு ஆடுகள், ரூ.25 ஆயிரம் ரூபாய் கட்டினால் வட்டி இல்லா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தது.
தமிழகம் முழுவதும் முகவர்களை நியமித்து அவர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறிவித்தபடி மூக்குத்தியை தராமல் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது.
அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஜெயராமன், இளவரசி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமறைவாகினர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.





