படித்தது பத்தாம் வகுப்பு..! பார்த்த தொழிலோ மருத்துவம்..! தொண்டியில் போலி டாக்டர் கைது!!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக நிலா கிளினிக் என்ற பெயரிலும், மங்கள குடியில் மாறன் கிளினிக் என்ற பெயரிலும் கிளினிக் துவங்கப்பட்டது. இந்த கிளினிக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் மருத்துவராக இருந்தார். இவருடைய கிளினிக்கில் சிகிச்சை பெற்ற தொண்டியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து ராஜலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரிய வந்து, இறந்த பெண்ணின் மகன் முருகேசன், தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலி மருத்துவர் ராஜலட்சுமி தலைமறைவானார். நேற்று கிளினிக்கில் இருந்து சாமான்களை எடுக்க வந்தபோது போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்றும், பியூட்டிசியன் கோர்ஸ் மட்டுமே படித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்றும் தற்போது வேறு ஒரு நபருடன் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இவரது சான்றிதழை ஆய்வு செய்த போலீசார் இவரது சான்றிதழும் போலி என்றும், அவர் வைத்திருந்த அந்த சான்றிதழ் ஏற்கனவே 1987ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்று தற்போது ஹைதராபாத்தில மருத்துவராக இருப்பவருடையது என்பதும் தெரிய வந்தது. அந்த மருத்துவமனையில் சோதனையிட்ட போலீசார் மருந்துகள், மாத்திரைகள், ஊசி மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இது தொடர்பாக போலி டாக்டர் ராஜலட்சுமி, அவரது நண்பர்கள் சுரேந்தர் இருவரையும் தொண்டி போலிசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கிளினிக் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தொண்டி பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கிங் பீட்டர், கொடிபங்கு கிராமம் செல்வம், வக்கீல் கலந்தர்ஆசிக் அகமது ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தொண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அனைவரையும் திருவாடானை நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன் ஆஜர் படுத்தினார்கள். அனைவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




