சிவகங்கைக்கு ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்..!
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இன்றைய பயணத்தின் தொடக்கமாக, காலை 09.30 மணியளவில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணியளவில் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு சட்டக்கல்லூரி வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ரூ.2,559.50 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், ரூ.13.36 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவின் ஒரு பகுதியாக, 15,453 பயனாளிகளுக்கு ரூ.205.06 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார்.
ஒட்டுமொத்தமாக இந்த ஒற்றை விழாவின் மூலம் சுமார் ரூ.2,872 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் சிவகங்கை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, காலை 11.15 மணியளவில் கழனிவாசல் பகுதியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.






