சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாட்டின் 77 ஆவது குடியரசு தினம் வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக வார இறுதி நாட்களையும் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இதைமுன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 550 பேருந்துகளும், நாளை 405 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 100 பேருந்துகளும், நாளை 90 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மாதவரத்திலிருந்து இன்றும், நாளையும் 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் திங்கட்கிழமையன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகளும், திருப்பூர், பெங்களூரு மற்றும் கோவை ஆகிய இடங்ளுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கும்படி போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.





