தமிழ்நாட்டில் இன்று முதல் 2 நாட்களுக்கு கடை அடைப்பு..!
வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவரான த.வெள்ளையன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வணிகர் சங்க பேரவையினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தநிலையில் வெள்ளையனின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புதன்கிழமை வட மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும் என்றும், வியாழக்கிழமை தென் மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்படும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
த.வெள்ளையனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்களின் நலனுக்காக உழைத்தவர் த.வெள்ளையன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.





