9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!
கோவையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை வயிற்று வலிக்காக அவரது தாய் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மாணவி கருவுற்றிருப்பது தெரியவந்தது.
மாணவி உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் தாயும், மகளும் மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவலர்கள் மாணவியை அவரது வீட்டில் கண்டு பிடித்து விசாரணை நடத்திய போது சக வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் உட்பட 10 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார்த்திக், தனசேகர் மற்றும் சந்தோஷ் என்ற மூன்று இளைஞர்களும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.







