டிசம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்!
ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு சோலார் புதிய பேருந்து வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 235 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புதிய பேருந்து நிலையம் உள்பட 790 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் , 91 கோடியே 9 லட்ச மதிப்பீல் 23 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்ச மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என 605 கோடி கோடியே 44 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “ஈரோடு மாவட்டத்திற்கு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்காக ரூ.9,327 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஏற்கெனவே ஈரோட்டிற்கு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
“ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க. அரசு அளித்த அத்தனை தேர்தல் அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடினார். அப்போது தமிழகத்திற்கான திட்டங்களை நிராகரிக்கும்போது மத்திய அரசு “கம்பி கட்டும் கதை” சொல்கிறது என்றார்.
மேலும் பாஜக ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல் மற்றும் செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளன. மத்திய அரசு வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழகத்தை பயன்படுத்திக் கொள்கிறது; ஆனால், மாநிலத்திற்கு நிதி ஒதுக்கும் போது “பட்டை, நாமம்” போடுகிறது எனவும் மக்களுக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையேயான பாசப் பிணைப்பைக் கெடுக்க சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.





