தமிழகத்தில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு! 13 வாக்குச்சாவடிகளில் நடத்த ஆணையம் உத்தரவு!!
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி, 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார். அதன்படி, தேனி உள்பட 46 பூத்களில் தவறு நடந்ததால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்பு எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், வரும் 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படிக் தருமபுரி – 8, திருவள்ளூர்-1, கடலூர்-1, தேனி-2, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் – 1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில், ஈரோடு தொகுதிக்குட்ட வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலத்தில், வாக்குச்சாவடி எண் 248இல் குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு தற்போது மறுதேர்தல் நடக்கிறது. இதுபற்றி, வெள்ளக்கோவில் தாசில்தாரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விவேகானந்தாவை, எமது ‘குற்றம் குற்றமே’ இதழ் சிறப்பு நிருபர் தொடர்பு கொண்டு கேட்டார்.
அவர் அளித்த பதிலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் லோகநாதன் என்பவர், ஒவ்வொருவர் வாக்களித்த பிறகும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தவில்லை. இதனால், தொடர்ச்சியாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு மறுதேர்தல் நடக்கிறது என்றார்.
இதேபோல், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் வரும் 12-ம் தேதி காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




