பிரியங்காவின் தமிழக பிரசார பயணம் திடீரென ஒத்திவைப்பு!
தமிழகத்திற்கு நாளை வருவதாக இருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பயணம், அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தற்போது அதிமுக- திமுக தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தமிழகம் வந்து சென்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி கோவை, திருப்பூர், தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை கன்னியாகுமரிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து முதல்முறையாக தமிழக பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வருவது, அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரியங்காவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைக்கு பதிலாக வரும் ஏப்ரல் 3-ம் தேதி பிரியங்கா தமிழகத்திற்கு வருவா என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.






