வேட்டி சட்டையுடன் மதுரை வந்த மோடி… மீனாட்சி கோவிலில் தரிசனம்!
நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம், நாளை மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பாஜக – அதிமுக கூட்டணியின் 36 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக, பிரதமர் மதுரை வந்துள்ளார். மேற்குவங்கத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் வந்தடைந்தார்.

முதல்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து சுவாமி தரிசனத்திற்காக பிரதமர் மோடி வந்தார். கிழக்கு கோபுரம் அருகே உள்ள அம்மன் சன்னதி வழியாக உள்ளே சென்ற பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல், மீனாட்சியம்மன் கோவிலில் செலவிட்ட பிரதமர், அங்குள்ள பல சன்னதிகளிலும் வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி மீனாட்சியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவில் சிற்பங்கள், வேலைப்பாடுகளை ஆர்வமுடன் பார்த்து பிரதமர் மோடி வியந்தார். முன்னதாக கோவில் வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமரின் வருகையை அடுத்து மதுரை முழுவதும் சுமார் 3,000 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மதுரை நகரில் மழை பெய்து, நகரின் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.





