60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்!
கொரொனா தடுப்பூசிக்காக தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நாளை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தனியார் மருத்துவமனைகள் கொரொனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம் என்றும், இதில் 150 ரூபாய் தடுப்பு மருந்தின் விலையாகவும் சேவை கட்டணமாக 100 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர்கள் கோவிட் -2.0 செயலி மூலமோ அல்லது ஆரோக்கியசேது செயலி மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவமனை பெயர்களை விருப்பம் போல தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருப்பவர்கள் இணை நோய் உள்ளது என்பதை உறுதி செய்ய மருத்துவர் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தர வேண்டியிருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.






