தமிழகத்தின் 3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை..!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் வடக்கு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





