திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வியாபாரம் செய்யும் மக்கள்..!
திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வரும் கிராம மக்கள். இது மருத்துவ குணம் இருப்பதால் நல்ல விலைக்கு போவதாக கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களிலும் அதன் சாலை ஓரங்களிலும், வயல்காட்டிலும் வேப்பமரம் அதிகம் உள்ளது.
கடந்த காலங்களில் இந்த மரங்களில் ஒருவித நோய தாக்கத்தால் இலைகள் அனைத்தும் கருகி பின் தளிர்விட்டு வந்ததால் வேம்பு மரங்களில் காய்ப்பு குறைந்த அளவில் இருந்து வந்தது. தற்போது இந்த வருடம் எவ்வித நோய் தாக்குதலுமின்றி காய் அதிக அளவில் காய்த்து பழங்கள் மரங்களின் கீழ் விழுகிறது. அந்த பழங்களை சேகரித்து அதிலிருந்து கொட்டைகளை பிரித்து எடுத்து அதை உலர வைத்து வாங்கும் வியாபாரிகளிடம் விற்கின்றனர்.

ஒரு கிலோ 70 முதல் 100 வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். வியாபாரிகள் மூடைகளில் கட்டி வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். வேம்பு மரக் கொட்டையில் இருந்து வேப்ப எண்ணெய் பிரித்தெடுக்கவும், சில மருத்துவ பொருட்கள், சோப்பு தயார் செய்யவும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது கொரொனா வைரஸ் தொற்றால் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் வேம்பு மரக் கொட்டைகளை சேகரித்து விற்பதன் மூலம் வாழ்க்கைக்கு தற்போது பெரும் உதவியாக இருக்கின்றது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.






