நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் இந்தியாவுக்கு வர மறுப்பு
வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் நித்யானந்தாவின் பிடியில் உள்ள தனது இரண்டு மகள்களையும் மீட்டுத்தருமாறு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் இருவரும் பார்டாஸ் நாட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். அப்போது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவிற்கு வர விருப்பமில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வருகிற 16-ஆம் தேதிக்குள் இருவரும் எந்த நாட்டில் உள்ளார்களோ அங்குள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டனர்.
இரண்டு பெண்களும் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






