MYV3 ஆப்ஸ் மோசடி: பணத்தை இழந்தவர்கள் உடனே புகார் அளியுங்கள்
Myv3 Ads செயலி நிறுவனம் மீது உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்குமாறு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். MYV3-APP என்ற நிறுவனம் பொது மக்களிடம் முதலீட்டுத் தொகை பெற்று, அதனைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாகக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், MYV3 நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த அனைத்துப் பொது மக்களும் உடனடியாக கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு வரும்போது, தாங்கள் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களையும் கொண்டு வந்து, காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, கோவை அவர்களிடம் புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





