ரூ.10 கோடிக்கு பேரம் பேசினார்கள்.. கமல் கட்சி பிரபலம் பகீர் தகவல்!
சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சினேகன், பரபரப்பான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு 12ம் தேதி தொடங்கி, நாளையுடன் நிறைவு பெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளிட்டவை ஓரணியாகவும், திமுக- காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளன.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சரத்குமார் கட்சி உள்ளிட்டவை கைகோர்த்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரும் கவிஞரும் பிக்பாஸ் போட்டியாளருமான சினேகன், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் சினேகன், நான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருப்பதற்காக எனக்கு ரூபாய் 10 கோடிக்கு விலை பேசினார்கள் என்று பரபரப்பான தகவலை வெளியிட்டார். எனினும், அதற்கெல்லாம் அசராமல் போட்டியிடுவதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.
எனினும், தனக்கு 10 கோடி ரூபாய் விலை பேசிய கட்சிக்காரர் யார் என்ற விவரத்தை கவிஞர் சினேகன் கூற மறுத்துவிட்டார். எனினும் சினேகன் வெளியிட்டுள்ள இந்த தகவல், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினேகன் போட்டியிடும் விருகம்பாக்கத்தில் நடிகர் மயில்சாமி சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.





