மு.க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்..!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் இடையேயான சந்திப்பு 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முகஸ்டாலின் முதல் முறையாக டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான கொரொனா தடுப்பூசிகளை வழங்குமாறும் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிரதமரை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் சந்திக்கவுள்ளார்.







