காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு..! காதலியின் பெற்றோரால் கொலையா..?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காணாமல்போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் காதலித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து விட்டதாக உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே அக்கறைபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மகேந்திரன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திங்கள் அன்று அதிகாலை அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மகளை மீட்டுத் தரக்கோரி பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாலையில் பெண்ணை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் மகேந்திரனின் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த சமயத்தில் உறவினர் வீட்டிலிருந்து மகேந்திரன் காணாமல் போனார்.
அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலயம் பின்புறம் உள்ள கிடங்கு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் மகேந்திரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உறவினர்கள் தான் மகேந்திரனை கடத்தி சென்று கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







