சிறப்பு மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு..!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.5000 பெண்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த தேர்தலுக்கு பின் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை.
யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.
திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி” என்று பதிவிட்டுள்ளார். இதே வீடியோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்றைக்கு காலை தமிழக அரசு சார்பில் ரூ. 5000 வரவு வைக்கப்பட்டிருக்கும். எதற்காக இந்தப் பணம்? கொரோனா உச்சத்தில் இருந்தபோது ரூ. 4000 வழங்கினோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் மாதம் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அதன்படி, 1.31 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்றுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தை மேம்படுத்த நாம் நினைத்தால், டெல்லியில் இருக்க கூடிய கூட்டமும், தமிழ்நாட்டில் அடிமையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி, அடுத்த 3 மாதத்திற்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சதி செய்வதாக தகவல் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை அறிவேன். எனவே தான் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ. 5000 வழங்கியிருக்கிறோம். சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக இன்று காலை 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் அது வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.





