இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதிய குதிரை..!
மயிலாடுதுறையில் சாலையில் ஓடிய குதிரைகள் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சங்கரன்பந்தல் பகுதியில் அதிகளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றன.
சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள் அடிக்கடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் சங்கரன்பந்தல் கடை வீதியில் ஓடிய இரண்டு குதிரைகள் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த குதிரையும் அங்கிருந்து ஓடியது .
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்களும் பலத்த காயமடைந்தனர். சங்கரன்பந்தல், ஆயப்பாடி, பொறையார் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் குதிரைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






