அன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் காயம்.சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியவரை கைது செய்ய முற்பட்ட போது நடந்த பரிதாபம் !!!
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஆத்திகுட்டை பகுதியில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் மதுவிலக்கு போலீசாரும்,அன்னூர் போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது நாச்சிமுத்து என்பவரது தோட்டத்து சாலையில் காட்டு பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காயை ( நாட்டு வெடிகுண்டு ) பறிமுதல் செய்தனர்.
அப்போது, அதனை கைப்பற்றிய காவலர் செந்தில்குமார் அதைக் கீழே வைக்கும் போது எதிர்பாராதவிதமாக கையிலிருந்து தவறி கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் காவலர் செந்தில் குமாருக்கு கால் மற்றும் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்ட சக காவலர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், சாராயம் வைத்திருந்த நாச்சிமுத்து என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுக்கடைகள் மூடப்பட்டதால் காட்டு பகுதியில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதும், காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது சட்ட விரோதமாக வெடி மருந்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







