தமிழக உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது! மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகார்
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு முற்றிலுமாக பறித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
கோவை சூலூர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்ட சபை தொகுதி இடைதேர்தல்களிலும் வெற்றி பெறும். புதுச்சேரி முதல், மன்னார் வளைகுடா பகுதி வரை வேதாந்தா நிறுவனத்திற்கு 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் எந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடுகின்றனரோ, அதே வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்மின் கோபுரங்களுக்கு அனுமதி அளித்து மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
தமிழகத்தின் உரிமைகளை பறிக்க பச்சைகொடி காட்டுவதை போல இந்த அரசு செயல்படுகின்றது. மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளை முற்றாக பறித்து வருகின்றது. எடுபிடி அரசாக அதிமுக நடந்து வருகின்றது.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார். பா.ஜ.க அல்லாத மதச்சார்பற்ற அணி என்பது தவறில்லை. இந்த சந்திப்பது வரவேற்கதக்கது. மத்திய தேர்தல் ஆணையம், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றது.
தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. பீதி காரணமாக 3 எம்.எல்.ஏ களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தோல்வி பயம், பதட்டத்தில் இருவரும் செயல்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




