சிபிஐ விசாரிக்க தடை கோரிய இபிஎஸ்..!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க தடை கோரிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் மீண்டும் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழகத்தில் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக ஆர் எஸ் பாரதி தனது வழக்கில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் ஆர் எஸ் பாரதி கூறியிருந்தார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிந்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை 2018ஆம் ஆண்டு விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக இபிஎஸ் சம்பந்தி சுப்ரமணியன், உறவினர் நாகராஜன், நண்பர் சேகர் ரெட்டி ஆகியோர் பற்றி ஏ ஆர் எஸ் பாரதி குறிப்பிட்டிருந்தார். செய்யாதுரை மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.





