ட்விட்டர் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!
டிவிட்டர் சேவை முடங்கியதாக பயனாளர்கள் கருதிய நிலையில், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில், சனிக்கிழமை இரவு முதல் பதிவுகளை சரியாக பார்க்க முடியவில்லை என்று பயனாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், டிவிட்டர் சேவை முடங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், டிவிட்டரில் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள் (Verified accounts) நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை (Unverified ) பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே வாசிக்கலாம். மேலும், புதிதாக டிவிட்டருக்கு நுழைபவர்கள், நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.
அதிக அளவிலான தரவுகள் வீணாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால், டிவிட்டர் சேவையை முழுமையாக பெற சந்தா செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.





