பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30000 நிவாரணம் வழங்க வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கும் பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் இந்த மாதம் 15ஆம் தேதி அன்று இருக்கும் நிலையில் அவகாசத்தை மாதம் இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேல் அதிகாரிகளோடு காப்பீட்டு அதிகாரிகளும் உடன் சென்று விவசாயிகளை சந்தித்து இளநிலை காப்பீட்டு திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்திய பழனிசாமி காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அரசே ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மழை தொடரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு ஏக்கருக்கு 30,000 நிவாரணத்தொகை அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதன் முதல் கட்டநிவாரண தொகையை வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.





