“நமக்கு எதுவும் வராது என கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்!!” கொரானா குறித்து வீடியோ வெளியிட்ட கமல்!!
கொரானா விழிப்புணர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், நமக்கு எதுவும் வராது கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருங்கள் என எச்சரித்துள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. கொரானா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக நாளை, மக்கள் ஊரடங்கை, நாட்டு மக்கள் தாமாக முன் வந்து நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.

மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் கொரானா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றையும் கமல் இன்று வெளியிட்டுள்ளார். அதில், நாளை அனைவரும் வீட்டிலேயே இருங்கள்; பிடித்தவர்களுடன் தொலைபேசியில் பேசுங்கள். நமக்கு எதுவும் வராது என கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம். மற்றவர்களிடம் இருந்து விலகி இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள் என கமல் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.







