தொகுதி மறுவரையறைக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு – இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு
தொகுதி மறுவரையறைக்கான கருப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடும் நிலையில் அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் எம்பிகளின் எண்ணிக்கை கடந்த 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, தொகுதிகளை மீண்டும் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போதைய மக்களவையில் அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் என்ற நிலையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்யவே தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின்படி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 850 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதில் யூனியன் பிரதேசங்களின் 35 தொகுதிகளும் அடக்கம்.
மகளிர் இடஒதுக்கீட்டை முன்கூட்டியே அதாவது 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் அதை விரைவுபடுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன், மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி தொகுதி மறுவரையறையில் மகளிருக்கு சுமார் 280 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இம்மசோதாக்களை நிறைவேற்ற இன்று முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இதனிடையே, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது என எச்சரித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தையும் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.





