--- --:--:-- --

ஈபிஎஸ், அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கு..!

1

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 8ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

 

இதே போல இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

அதில், தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Right Menu Icon