தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, அண்ணா நகர், அனகாபுத்தூர், பம்மல், பூந்தமல்லி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆலம்பாடி, கட்டிமேடு, ஆதிரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கடலோர தமிழகம் புதுச்சேரி காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஜூலை 22-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






