சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையால் தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இருவரும் போலீஸ்காா்கள் கொடூரமான சித்ரவதையால் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் போராட்டங்களும் நடை பெற்றன.
இருவரின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காா்கள் மீது கொலை வழக்கு பதிந்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, இருவரின் சடலத்தை வாங்க மறுத்து அவர்களுடைய குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இருவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்தது.பின்னர் அரசின் உறுதி மொழியை அடுத்து சடலங்களை பெற சம்மதித்தனர் ஜெயராஜ் குடும்பத்தினர்.

இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் துணை ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்றபிறகு சிபிஐ விசாரணை பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.






