10 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு ஆன்லைனில் படிக்க பூண்டி ரோட்டரி சங்கத்தலைவர் செல்போன் வழங்கி உதவி..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி, காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் அக்கினிராஜ். இவர் பனியன் கம்பெனியில் டைலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அழகுலட்சுமி, இருதய நோயாளி. வேலைக்கு செல்வதில்லை. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாவது மகள் திவ்யா. இவர் பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வது படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் திறக்காத நிலையில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
போதிய வருமானம் இல்லாததால் செல்போன் வாங்க முடியவில்லை. இதனால் திவ்யா படிக்க முடியாமல் திணறி வந்தார்.
இதனையறிந்த பூண்டி பேரூராட்சி தி.மு.க நகர துணை செயலாளர் மூர்த்தி மற்றும் தி.மு.க 7 வது வார்டு செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்திடம் திவ்யாவுக்கு செல்போன் வாங்கி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க தலைவர் முஹம்மது ஜாபர் தனதுசொந்த செலவில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திவ்யாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் இஞ்சினியர் முஹம்மது நஜீம், தி.மு.க 4 வது வார்டு பொருப்பாளர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.






