--- --:--:-- --

ஆதரவாளர்கள் புடைசூழ அதிமுக, அமமுக வேட்பாளர்கள் சூலூரில் மனுதாக்கல்

ADMK Surlur

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு, மே மாதம் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, அதிமுக சார்பில் முன்னாள் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியின் முன்னாள் எம்.பி சுகுமார் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

 

வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று, அதிமுக சார்பில் போட்டியிடும் வி்.பி.கந்தசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ தினகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.பி சுகுமார், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக சூலூர் கலங்கல் சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னர்,அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் சூலூர் தாலுக்கா அலுவலகம் வந்தனர்.

 

மனுத்தாக்கலின் போது முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, உடுமலை சண்முக வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon