நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்! திடீர் மறைவால் திரையுலகினர் அதிர்ச்சி!
நடிகரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ், சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46.
இலங்கையில் உள்ள கண்டி நகரில் 1973 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிறந்த ரித்தீஷ், தனது குடும்பத்தாருடன் 1976இல் ராமேஸ்வரத்திற்கு இடம் பெயர்ந்தார். சினிமாவிலும் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த ரித்தீஷ், 2009 பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அதிமுகவில் இணைந்த அவர், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரமும் மேற்கொண்டு வந்தார். நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்புகளை வகித்து வந்தார்.
நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படத்தின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்த அவர், அண்மையில் வெளிவந்த எல்.கே.ஜி. படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவி, ஒரு மகன் உள்ளார்.
ரித்தீஷின் திடீர் மறைவு திரை உலகினரையும், திமுகவினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




