கணவரை இழந்த நிலையில் 3 குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த பெண்!
கணவர் உடலை அடக்கம் செய்ய மதுரை வந்த இடத்தில் ஒரு மாதமாக போதிய உணவு இல்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாமல் குழந்தைகளோடு தவித்த பெண் ஆட்சியர் உத்தரவால் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். கோவை, சூலூர் வாகராம் பாளையம் பள்ளிகோரையில் வசித்து வந்த அஞ்சலி தேவி என்ற அந்த பெண்ணின் கணவர் முனீஸ்வரன் நெஞ்சுவலியால் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உயிரிழந்தார்.
அவரது விருப்பப்படி அவரது சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் உடலை அடக்கம் செய்தார் அஞ்சலிதேவி. பின்னர் ஊர் திரும்ப முடியாமல் கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் கணவரின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அவரது வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது.
இதனால் சொந்த ஊர் செல்ல நினைத்து அஞ்சலிதேவி ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் உதவியால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவி கோரினார். அவரின் நிலையை அறிந்து ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து தேவையான அரிசி, மளிகை பொருட்களை அளித்து சொந்த ஊருக்கு அஞ்சலி தேவியும் குழந்தைகளும் காரில் அனுப்பி வைக்கப்பட்டன.







