“அறிக்கை என்னுடையதல்ல.. ஆனா அதிலுள்ள தகவல்கள் உண்மையே!!” ரஜினியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பு!!
சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், என்னுடைய கடிதம் போன்று உலாவரும் அறிக்கை எனது அறிக்கை அல்ல என்றும், ஆனால் அதில் உள்ள தகவல்கள் உண்மை தான் என்றும் நடிகர் ரஜினி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படையப்பா படத்தில் ரஜினி – செந்தில் இடையேயான ஒரு காமெடி சீன் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். பெண் பார்க்க டிப்டாப்பாக போகும் செந்திலை, மாப்பிள்ளை அவர்தான்.. ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது என ஒன்றுக்கு இரு முறை ரஜினி கலாய்ப் பார்.
அதுபோல அவருடைய இன்றைய டுவிட்டர் பதிவும் அமைந்துள்ளது. ரஜினி வெளியிட்டது போல் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் ஒரு அறிக்கை உலா வந்து சர்ச்சையாகியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரஜினி பதிவிட்டுள்ளது தான் பரபரப்புக்கு காரணம்.
இது தொடர்பாக இன்று ரஜினி தமது ட்விட்டர் பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.
இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று அந்தப் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதனால் அரசியல் நிலைப்பாடு குறித்த ரஜினி தெரிவிக்கப் போவது என்ன? அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதமும் அவரது இந்த பதிவு மூலம் இப்போது எழத் தொடங்கியுள்ளது






