குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் ஒருவர் ஓட, ஒட விரட்டி வெட்டி படுகொலை
குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் ஒருவர் ஓட, ஒட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர்(36), அதே பகுதியிலுள்ள கிரசரில் வேலை செய்து வந்தார். இன்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர்.
இதை கண்டதும் தனசேகர் மோட்டார்சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த காலி இடத்திற்கு இறங்கி ஓடினார். அவரது நண்பரும் இறங்கி ஓடினார். ஆனால் மர்ம கும்பல் தனசேகரை விடாமல் விரட்டிச் சென்று தனசேகரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்ட தனசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் முன்விரோதம் காரணமாக ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார் அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது இந்த சம்பவம் குறித்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






