மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது..!
சென்னை மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காட்டை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவறையும், கல்லறையும் தான் பாதுகாப்பான இடம் என்றும், எனக்கு நீதி வேண்டும் எனவும் உருக்கமான தற்கொலை கடிதம் எழுதி, முன்னாள் பள்ளி ஆசிரியரின் மகன் மீது குற்றம் சாட்டியிருந்தார். கடிதத்தை கைப்பற்றி, முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவரிடம் இருந்து மாணவிக்கு அதிக ஆபாச குறுந்தகவல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர் விக்னேசிடம் விசாரணை நடத்தியதில் வலைதளம் மூலமாக அறிமுகமாகி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போக்சோ பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர்.





