தமிழகத்தில் பொது முடக்கம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவு.!
உருமாறிய கொரொனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் உருமாறி உள்ள கொரொனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் அங்கிருந்து சென்னை வந்த ஒரு பயணி உட்பட நாடு முழுவதும் 20 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைவதால் உருமாறிய கொரொனா வைரஸ் பரவலை முன்கூட்டியே தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதா என்பதை வல்லுநர்களிடம் முதல்வர் கேட்டறிவார் என தெரிகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டன் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் பிரிட்டனில் இருந்து சென்னை வந்துள்ள தொற்று பாதித்த நபரும் கிண்டி கிங் மருத்துவ மையத்தில் கண்காணிப்பில் உள்ளார். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.







