“வடகிழக்கு பருவ மழை இன்று தொடக்கம்!!” தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு!!
வடகிழக்கு பருவ மழைக்காலம் இன்று முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம், புதுவை, கேரளா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அதிக மழை தருவது வட கிழக்கு பருவ மழை தான். வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் பரவலாக கனமழையும், வங்கக் கடலில் புயல் சின்னமும் உருவாவதும் உண்டு. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழைக்காலம் முடியதாமதமானதால் மேற்கு திசையிலிருந்து காற்றின் வேகம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவ மழை தொடங்குவது தாமதமானது.
இந்நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமாக சூழல் தென் தீபகற்ப பகுதியில் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், அடுத்த நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த வடகிழக்கு பருவ மழை வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் வழக்கமான அளவுக்கு இருக்கும் என்றும் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழைப்பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






